கேரள மொடல்கள் மரணத்தில் மர்மம்!

1604153940 death 2
1604153940 death 2

2019 ஆம் ஆண்டில் மிஸ் கேரளா பட்டம் வென்ற அன்சி கபீர் உள்ளிட்ட மூவர் மகிழுந்து விபத்தில் பலியான வழக்கில் முக்கிய சந்தேக நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கேரள மொடல்களான அன்சி கபீர் (25), அஞ்சனா சாஜன் (26), அவர்களின் நண்பர் உள்ளிட்டோர் கடந்த முதலாம் திகதி கொச்சியில் ஏற்பட்ட மகிழுந்து விபத்தில் பலியாகினர்.

அவர்களின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பல தரப்பினர் கருத்து வெளியிட்டு வந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

அதற்கமைய, இந்த வழக்கில் முக்கிய சந்தேகநபராக கொச்சினில் உள்ள விடுதியொன்றின் உரிமையாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவ தினத்தன்று குறித்த விடுதிக்கு அவர்கள் மூவரும் சென்றுள்ளதாகவும், அதன்போது அவர்களுடன் சிலர் தகராறு செய்ததாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேற்படி விடுதியின் சிசிரீவி காணொளிகளைக் காவல்துறையினர் சோதனை செய்தபோது, அவை அழிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

சிசிரீவி காணொளி பதிவுகளை அழித்த குற்றச்சாட்டில் குறித்த விடுதியின் உரிமையாளர் உட்பட 5 பேரைக் கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பில் மகிழுந்தின் சாரதி கைது செய்யப்பட்டார்.

எனினும் தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறையினர், கொச்சியை சேர்ந்த விடுதி உரிமையாளரையும் கைது செய்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 11 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றதுடன், அதில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.