இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று (04) ஏற்பட்ட எரிமலை வெடிப்பு தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன.
செமுரு மலையில் தொடர்ச்சியான கரும்புகை பரவல் காரணமாக அங்குள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தில் இதுவரை ஒருவர் மரணமானதுடன், 41 பேர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக லுமஜங் மாகாண பிரதி தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
கட்டடங்களின் மேல்மாடிகளில் இருந்து வெளியேற முடியாத நிலையில் உள்ள பலரை மீட்கும் நடவடிக்கைகளுக்கு உலங்குவாநூர்திகள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
50 ஆயிரம் அடி உயரத்திற்கு கரும்புகை சூழ்ந்துள்ளதால், அந்த பிரதேசத்தில் பயணிப்பதை தவிர்க்கும்படி வானூர்தி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் 130 எரிமலைகளில் இதுவும் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.