இலங்கையில் சுவீடனின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் சந்தை விவகாரத்திற்கு ஆதரவளிக்கும் ‘பிஸ்னஸ் சுவீடன்’ மூலம் வர்த்தகத்தை மேலும் மேம்படுத்த உதவுவதாக இலங்கைக்கான சுவீடன் தூதுவர் கிளாஸ் மோலின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிடம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன் போது நாட்டின் முதலாவது பெண் பிரதமரை தெரிவு செய்தமைக்காக அமைச்சர் சுவீடனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக சுவீடன் – இலங்கை உறவுகளின் அபிவிருத்தி ஒத்துழைப்புக்களினால் ஏற்பட்ட வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா உறவுகளை உள்ளடக்கிய துடிப்பான பன்முக கூட்டாண்மை வரையிலான பரிணாம வளர்ச்சியை இரு தரப்பினரும் பாராட்டினர்.
இலங்கையில் சுவீடனின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் சந்தை விவகாரத்திற்கு ஆதரவளிக்கும் ‘பிஸ்னஸ் சுவீடன்’ மூலம் வர்த்தகத்தை மேலும் மேம்படுத்த உதவுவதாகத் தெரிவித்தார்.
கொத்மலை அணையை நிர்மாணிப்பதில் முக்கியமான அபிவிருத்தி பங்காளியாக சுவீடனின் பங்களிப்பை நினைவு கூர்ந்த அமைச்சர், நிலையான அபிவிருத்தி சுத்தமான தொழிநுட்பம் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் உள்ளிட்ட ஒன்றிணைந்த துறைகளில் சுவீடனுடனான ஈடுபாட்டை அதிகரிப்பதற்கான இலங்கையின் தயார் நிலையைத் தெரிவித்தார். நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியின் முன்னேற்றம் குறித்தும் தூதுவரிடம் அமைச்சர் விளக்கினார்.