2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டை முழுவதுமாக புகைப்பிடிக்காத நாடாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக புதிய திட்டங்களை நியூஸிலாந்து வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
அதன்படி 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்த எவரும் தங்கள் வாழ்நாளில் சிகரெட் அல்லது புகையிலை பொருட்களை வாங்க முடியாது.
அதே நேரத்தில் வயதானவர்களுக்கு கிடைக்கும் சிகரெட்டில் நிகோடின் அளவு குறைக்கப்படும்.
சிகரெட் விற்பனையில் ஈடுபடும் சில்லறை விற்பனையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கான சட்டம் அடுத்த ஆண்டு இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சுகாதார அதிகாரிகளும் ஏனைய பிரச்சாரக் குழுக்களும் இந்த நடவடிக்கையினை வரவேற்றுள்ளன.
முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் புகையிலைத் தொழிலின் மீதான உலகின் கடுமையான ஒடுக்குமுறைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
நியூசிலாந்தில் ஏற்கனவே சிகரெட்டுகளுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது, ஆனால் புகையிலையற்ற நாட்டை உருவாக்கும் இலக்கை அடைய இன்னும் நடவடிக்கை தேவை என்று சுகாதார அமைச்சகம் கூறுகிறது.