மியன்மார் இராணுவத்தினரால் கிராம மக்கள் 11 பேர் எரித்துக் கொலை!

myanmar
myanmar

மியன்மாரில் கிராம மக்கள் 11 பேர் இராணுவத்தினரால் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மியன்மாரில் கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி அந்நாட்டு இராணுவம் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதற்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வரும் இராணுவம், இதுவரை 1,300க்கும் அதிகமான போராட்டக்காரர்களை சுட்டுக் கொலை செய்துள்ளது.

அத்துடன், இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வரும் அதே வேளை, ஒரு சிலர் ஆயுதங்களை ஏந்தியும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் மியன்மாரின் வடமேற்கு பகுதியில் உள்ள மோனிவா நகரில் அணிவகுத்து சென்ற இராணுவ வாகனங்கள்மீது சிலர் கையெறி வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இராணுவ வீரர்கள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் சென்று 11 பேரை உயிரோடு எரித்துக் கொலை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் மியான்மரில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், இது குறித்து மியன்மார் இராணுவம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இதேவேளை, யாங்கூன் நகரில் கடந்த 5 ஆம் திகதி மியன்மார் இராணுவ ஆட்சிக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் இராணுவ வாகனமொன்று மோதியதில் 3 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.