திருமணமாகி 6 மாதங்களின் பின்னர் மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த கணவர்!

9912murder16 2
9912murder16 2

இந்தியாவின் மஹாராஷ்ட்ர மாநிலத்தில் திருமணமாகி 6 மாதங்களின் பின்னர் மனைவியின் தலையைத் துண்டித்துக் கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். 

ராய்கட் மாவட்டம் – மதிரன் பகுதியைச் சேர்ந்த ராம்பால் (25) என்பவர், பூனம் (27) என்ற பெண்ணைக் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார்.

சந்தேக நபர் கணினி பொறியியலாளராகக் கடமையாற்றி வந்துள்ளதுடன், அவரின் மனைவி தனியார் வைத்தியசாலையொன்றில் தாதியாக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், திருமணத்திற்குப் பின்னர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று அவர் தனது மனைவியுடன் மதிரன் பகுதியில் உள்ள விடுதியொன்றுக்கு சென்றுள்ளார். இதன்போது கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சந்தேகநபர் தான் மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தைக் கொண்டு மனைவியைக் குத்திக்கொலை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலும், மனைவியின் தலையைத் துண்டித்த அவர் அதைப் பையொன்றினுள் வைத்து எவருக்கும் தெரியாமல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குறித்த விடுதியை விட்டு வெளியேறியமை அங்கிருந்த சிசிரீவி கெமராவில் பதிவாகியிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அறையிலிருந்து எவரும் வெளியே வராத காரணத்தினால் சந்தேகமடைந்து குறித்த அறையைத் திறந்து பார்வையிட்ட அந்த விடுதியின் உரிமையாளர், அங்குத் தலை துண்டிக்கப்பட்டு நிர்வாணமாக பெண்ணின் சடலம் இருந்ததைக் கண்டு காவல்நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன், குறித்த விடுதிக்கு அருகே இருந்து பையொன்று காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த பையிலிருந்த மருந்துச்சீட்டு மற்றும் அடையாள அட்டையை வைத்து உயிரிழந்த பெண் பூனம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அதற்கமைய, மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது கணவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.