ஆபிரிக்காவில் உணவு விடுதியில் தற்கொலைதாரி நடத்திய வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர்.
மத்திய ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பெனி நகரில் மதுபான விடுதி ஒன்றில் நேற்று முன்தினம்(25) இரவு நத்தார் கொண்டாட்டம் நடைபெற்று கொண்டிருந்தது.
இதன்போது அங்கு வந்திருந்த தற்கொலைதாரி ஒருவர் மதுபான விடுதிக்குள் நுழைய முயன்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவரை நுழைவாயிலேயே தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதையடுத்து அந்த தற்கொலைதாரி வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளார்.
இதில் தற்கொலைதாரி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.
மேலும் இந்த குண்டு வெடிப்பில் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகியுள்ளதுடன் 13 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.