மோதல் இடம்பெற்று வரும் நிலையில் மரியுபோலில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் யுக்ரைனின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிக்கு சென்றுள்ளனர்.
எனினும் குறித்த பகுதியிலுள்ள இரும்பு தொழிற்சாலையில் மேலும் சிலர் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிராமத்திற்கு சில மக்கள் வந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
யுக்ரைனின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஷபோரிஜ்ஷியா பகுதிக்கு 100 கணக்கான மக்கள் வந்துள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தமது ருவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், குறித்த இரும்பு தொழிற்சாலையில் இருந்து மேலும் சிலரை மீட்பதற்கான பணிகளில் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து உக்ரைன் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த பகுதியில் சுமார் 2 மாதங்கள் தங்கியிருந்ததாக தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் நிலத்தடி சுரங்கப் பாதைகளில் பல நாட்களாக தங்கியுள்ளனர்.
அவர்களுக்கான உணவு மற்றும் நீர் விநியோகம் குறைவடைந்து வருகின்றமையால் அவர்களது உடல்நிலை குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.