காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு – ஐநா பொதுச்செயலாளர்

UN 1
UN 1

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியலமைப்பின் 370ஆவது பிரிவை மத்திய அரசு விலக்கியதிலிருந்து அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. காஷ்மீர் தலைவர்கள் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினை குறித்து பாகிஸ்தான் அரசு தொடர்ந்து எதிர்குரல் எழுப்பிவருகிறது. இருதரப்புக்கும் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன் பதட்டமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் ஐநா பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக், பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது காஷ்மீரில் உள்ள அசாதாரண சூழல் மாறவேண்டும், மனித உரிமைகள் காக்கப்படவேண்டும், அதற்கு ஒரே தீர்வு பேச்சுவார்த்தை மட்டுமே என்று பொதுச்செயலாளர் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

புதன்கிழமை அன்று பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டெரஸ் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தியா, பாகிஸ்தான் இரு தரப்பிலும் எங்களைக் கேட்டுக்கொண்டால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் தற்போதைய நிலைகுறித்தும் இப்பிரச்சினைக்கான தீர்வு குறித்தும் பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, “மனித உரிமைகள் அந்தப் பகுதியில் மதிக்கப்படவேண்டும். இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் மட்டுமே நிரந்தரத் தீர்வை எட்டமுடியும்” என்று ஆண்டனியோ குட்டெரஸ் பதிலளித்தார்.

காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசப் பிரச்சினையாக கொண்டு செல்ல பாகிஸ்தான் அரசு முயற்சித்துவர, இந்தியாவோ அது உள்நாட்டுப் பிரச்சினை என்று கூறிவருகிறது.

அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கில் ஐநா சபையின் உயர்மட்ட பொது சபை கூட்டம் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெறுகிறது. அப்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பேசவுள்ளார்.