கொரோனாவால் 160 கோடி தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

8 vv
8 vv

கொரோனா லாக்டவுன்களால் உலகம் முழுவதும் சுமார் 160 கோடி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வேலை இழக்கும் அபாயம் உள்ளது என்று ஐ.நாவின் உலகத் தொழிலாளர் அமைப்பான ஐஎல்ஓ எச்சரித்துள்ளது.

உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா மிகப் பெரும் தாக்கத்தையும் அழிவையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகள் கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் லாக்டவுன்களை அமல்படுத்தி வருகின்றன.

இத்தகைய லாக்டவுன்கள் சர்வதேச பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் கொரோனா தாக்கத்தால் ஏற்படப் போகும் விளைவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் உலகத் தொழிலாளர் அமைப்பான ஐ.எல்.ஓ. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலகம் முழுவதும் மொத்தம் 330 கோடி (3.3 பில்லியன்) தொழிலாளர்கள் உள்ளனர். இதில் முறைசாரா பொருளாதார அமைப்பில் 200 கோடி (2 பில்லியன்) தொழிலாளர்கள் இருக்கின்றனர்.

கொரோனா ஏற்படுத்தியிருக்கும் தாக்கமானது 50%-க்கும் அதிகமான அளவு அதாவது 160 கோடி தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை இழக்கச் செய்யக் கூடும். சர்வதேச அளவில் தொழிலாளர்களின் வருவாய் என்பது கொரோனா லாக்டவுன்கள் காலத்தில் 60% குறைந்திருக்கிறது.

ஆசிய, பசிபிக் நாடுகளில் இந்த வருவாய் இழப்பு என்பது 21.6% ஆக இருக்கிறது. ஆப்பிரிக்கா, அமெரிக்காவில் இது 80%; ஐரோப்பா, மத்திய ஆசிரியாவில் 70% ஆக வருவாய் இழப்பு உள்ளது. கொரோனாவின் தாக்கத்தால் சுமார் 43.5 கோடி (430 மில்லியன்) சிறு மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளன.

உலகின் பல கோடி தொழிலாளர்களுக்கு உணவும் இல்லை- உரிய பாதுகாப்பும் இல்லை. அவர்களுக்கு என எதிர்காலம் எதுவுமே இல்லை. உலகின் பல பகுதிகளிலும் பல்வேறு தொழில்நிறுவனங்கள் மவுனித்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன.

ஆகையால் தொழில்களைப் பாதுகாப்பது, தொழிலாளர்களை காப்பாற்றுவது உள்ளிட்ட பல்வேறு எதிர்கால திட்டங்கள் அவசியமானது. இவ்வாறு ஐ.எல்.ஓ. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.