இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று இந்தியா வருகை தருகின்ற சீனா அதிபர் ஜின்பிங் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். குறித்த பேச்சுவார்த்தை இன்றும் நாளையும் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படாது.
சீனா அதிபருக்கு உற்சாக வரவேற்பளிக்க தமிழகம் காத்திருக்கிறது.
சீன அதிபர் ஜி ஜிங்பின் வருகைக்காக சென்னையில் தோட்டக்கலைத் துறை சார்பாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பெரிய அளவில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு, மேடை இருக்கும் பகுதி வரை காய்கறிகளை வைத்து அலங்காரம் செய்திருக்கிறார்கள். தமிழக அரசு சார்பாக பிரம்மாண்டமாக காய்கறி மூலம் இந்த அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 3 டொன் காய்கறிகள் பயன்படுத்தப்பட்டு அலங்காரம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனாவுக்கும் தமிழகத்துக்கும் குறிப்பாக மாமல்லபுரத்துக்குமான உறவு பல்லாயிரம் ஆண்டுகளாக நீடிக்கிறது. இதனால் ஒட்டுமொத்த தமிழகமுமே சீனா அதிபரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இரு தலைவர்களின் சந்திப்பை தொடர்ந்து சுற்றுலா நகரமான மாமல்லபுரம் புதிய பொலிவுடன் திகழ்கிறது.