துருக்கி நடத்திய தாக்குதலில் 595 குர்திஷ் போராளிகள் பலி

turky
turky

சிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது துருக்கி ராணுவம் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 595 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியாவின் வடக்கு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததையடுத்து துருக்கி அதிபர் எர்டோகனின் உத்தரவில் அந்நாட்டு ராணுவம் ‘அமைதி வசந்தம்’ என்ற பெயரில் சிரியா நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து குர்திஷ் போராளிகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலுக்கு குர்திஷ் போராளிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆனால், துருக்கியின் ஆக்ரோஷமான தாக்குதலுக்கு பயந்து குர்திஷ் மக்கள் லட்சக்கணக்கானோர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில், சிரியாவின் வடக்கு பகுதியில் ஒக்டோபர் 9 முதல் கடந்த ஒரு வாரம் இராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 595 குர்திஷ் போராளிகள் கொல்லப்பட்டதாக துருக்கிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் தங்கள் நாட்டு எல்லைக்குள் புகுந்து குர்திஷ்கள் மீது துருக்கி நடத்தும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிரிய நாட்டின் அரசுப்படைகள் எல்லைப் பகுதிக்கு விரைந்துள்ளது.

இதனால் சிரியா மற்றும் துருக்கி இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.