சிரியா மீது விமான தாக்குதல்- 5பேர் பலி

siriya
siriya

போர் நடவடிக்கைகளை 5 நாட்கள் தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஒப்புதல் அளித்த துருக்கி அரசு சிரியா மீது இன்று மீண்டும் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கி மற்றும் சிரியாவிற்கிடையிலான போரினை சுமுகமாக தீர்த்து வைக்கும் முகமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சும், வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் துருக்கிக்கு விரைந்திருந்தனர்.

பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து தற்காலிக போர் நிறுத்தத்திற்கு துருக்கி ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்தார்.

துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் மைக் பென்ஸ் இடையே நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. இராணுவ நடவடிக்கையால் ஏற்படும் பேரிழப்புகளை தவிர்ப்பதே தனது முதல் பணி என பென்ஸ் தெரிவித்தார்.

துருக்கிய எல்லையிலிருந்து சுமார் 20 மைல் தெற்கே உள்ள ஒரு பாதுகாப்பு வளையத்திலிருந்து குர்திஷ் போராளிகளை திரும்பப் பெறுமாறு பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து குர்திஷ் போராளிகளும் இந்த போர்நிறுத்த ஒப்பந்ததத்திற்கு கட்டுப்படுவதாக தெரிவித்தனர்.

ராஸ் அல்-ஐன் முதல் தால் அபியாட் வரையிலான பகுதியில் உள்ள குர்திஷ் போராளிகள் திரும்ப பெறப்படுவார்கள். ஆனால், மற்ற பகுதிகளில் உள்ள படைகள் பற்றி எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை எனவும் குர்திஷ் படைத் தலைவர் மாஸ்லம் அஃப்டி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் சுமார் ஒருமணி நேரம் மட்டுமே நீடித்ததாகவும் ராஸ் அல்-ஐன் நகரின் கிழக்கில் உள்ள பாப் அல்-கெய்ர் கிராமத்தின் மீது துருக்கி நாட்டு விமானப்படைகள் இன்று நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 5 பேர் உயிரிழந்ததாக சிரியாவில் உள்ள போர் நிலவரங்களை கண்காணித்து வரும் மனித உரிமை அமைப்பின் தலைவர் அப்டெல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.