கல்கி ஆசிரமத்தில் 90 கிலோ, தங்கம் 44 கோடி பறிமுதல்

kalki krishna
kalki krishna

கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமானவரித் துறை சோதனையில் 90 கிலோ தங்க நகைகள், 44 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த விவரம்:

ஆந்திர மாநிலம் நெகமத்தில் 30 வருடங்களுக்கு மேலாக கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. விஜயகுமார்தான் இந்த ஆசிரமத்தை நடத்தி வருகிறார். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகளுக்கு அறிமுகம் ஆனார். அவரது சிந்தனைகள் விஜயகுமாரை ஈர்த்தது. அப்போதுதான் தியானத்தின் மீது ஒரு பிடிப்பு ஏற்பட்டு, கல்வி நிறுவனத்தை ஆரம்பித்தார். தன் பெயரையும் கல்கி பகவான் என்றும் சூட்டிக் கொண்டார்.

திடீரென ஒரு நாள் தன்னை ஒரு கடவுளாக அறிவித்துக்கொண்டார். அதாவது தன்னை விஷ்ணுவின் அவதாரம் என்றும் இனிமேல் தன்னுடைய பெயர் கல்கி பகவான் என்றும் பகிரங்கமாக சொல்ல தொடங்கினார். இவர் கல்கி பகவான் ஆகிவிட்டதால், இவரது மனைவி பத்மாவதி “அம்மா பகவான்” ஆகிவிட்டார்.

ஆனால், சம்பந்தப்பட்ட சாமியாரை ஆசிரமத்தில் காணாமல் போயுள்ளதாகவும் அவருக்கு உடம்பு சரியில்லை என்று தகவல் வந்ததற்கு பிறகு என்னானார் என்றே தெரியவில்லை. சாமியார் மனைவி புஜ்ஜம்மாவையும் காணவில்லையாம். இதைவிட அதிர்ச்சி, இந்த சாமியார் தம்பதி 2 வருடங்களாகவே இங்கு இல்லையாம். நிறுவன பொறுப்புகளை மகன் கவனித்து வந்தாலும், இந்த தம்பதி இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பதுதான் பெரிய கேள்வியாக எழுந்து வருகிறது.

அதேபோல சீனா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலும் இந்த ஆசிரமத்தின் கிளைகள் உள்ளன. இந்த ஆசிரமம் வெல்னஸ் குழுமம் என்ற பெயரில் கட்டுமானம், ரியல் எஸ்டேட், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும் முதலீடு செய்து வருகிறது. வெளிநாடுகளிலும் இந்த நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

இந்நிலையில் இந்த ஆசிரம நிருவாகம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாகவும், நன்கொடையாக வரும் பணத்தை அரசிடமிருந்து மறைத்து வேறு தொழில்களில் முதலீடு செய்வதாகவும் வருமானவரித் துறைக்கு புகார்கள் வந்ததன் அடிப்படையில் வருமானவரித் துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.

ஆசிரமத்தின் மீது கூறப்பட்ட புகார்களுக்கமைய நாடு முழுவதும் உள்ள அந்த ஆசிரமத்தின் கிளைகள் என மொத்தம் 40 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் 400 பேர் கடந்த 16ஆம் திகதி ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

ஆறு நாட்களாக நடைபெற்ற இந்தச் சோதனை ஞாயிற்றுக்கிழமை அனைத்து இடங்களிலும் நிறைவு பெற்றது.

இந்தச் சோதனையில் இது வரை அந்த ஆசிரமம் ரூ.800 கோடி வருவாயை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதை வருமானவரித் துறை கண்டறிந்துள்ளது. அதேபோல கணக்கில் வராத 44 கோடி இந்தியப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 28 கோடி மதிப்புள்ள 90 கிலோ தங்க நகைகள், ரூ.5 கோடி மதிப்புள்ள வைர நகை, 20 கோடி வெளிநாட்டுப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் வெல்னஸ் குழுமம் தனது பெயரிலும், பினாமி பெயரிலும் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் வைத்திருப்பதும், துபாய், சிங்கப்பூர், ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ஹவாலா பணமாக ரூ.100 கோடி முதலீடு செய்திருப்பதும் வருமானவரித் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வரி ஏய்ப்பு தொடர்பான பல்வேறு ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக வருமானவரித் துறையினர், விஜயகுமாரின் மகன் கிருஷ்ணா, அவர் மனைவி ப்ரீத்தா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று வருமான வரித் துறையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சோதனையில் கிடைத்த பணம், நகை, ஆவணங்கள் அடிப்படையில் நடைபெறும் விசாரணைக்கு ஆஜராகுமாறு கிருஷ்ணா, ப்ரீத்தா மற்றும் வெல்னஸ் குழும நிர்வாகிகளுக்கு வருமானவரித் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள், ஓரிரு நாட்களில் விசாரணைக்கு ஆஜராவார்கள் என வருமானவரித் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே கிருஷ்ணா, ப்ரீத்தா ஆகிய இருவரும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அருகே பெரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக திங்கள்கிழமை இரவு தகவல் வெளியாகியுள்ளது.