போரை நிறுத்த அர்மீனியா – அசர்பைஜான் ஒப்பந்தம்!

சர்ச்சைக்குரிய நாகோர்னோ- காராபாக் எல்லைக்காக நடைபெற்று வந்த போரை நிறுத்துவதற்கு அர்மீனியா, அசர்பைஜான் நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் முன்னிலையில் அர்மீனிய மற்றும் அசர்பைஜான் நாட்டுப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மாஸ்கோ நகரில் சுமார் 10 மணி நேரம் நீடித்த சுமூகமான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு தரப்பினரும் போரை நிறுத்துவதற்கு ஒப்புக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இன்று (10) மதியம் முதல் போர் நிறுத்தத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

போர்க் கைதிகள் மற்றும் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் உடல்களைப் பரிமாறிக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அர்மீனியா, அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான எல்லையாக பிரிக்கும் பகுதியில் நகோர்னோ-கராபத் என்ற மாகாணம் அமைந்துள்ளது

அசர்பைஜானில் அமைந்திருந்த இந்த மாகாணத்தில் பெரும்பான்மையானோர் அர்மீனிய ஆதரவாளர்களே ஆகும். 1994ஆம் ஆண்டு இரு நாடுகளும் இடையே நடந்த போரில் இந்த மாகாணத்தின் பெரும் பகுதியை அர்மீனியா கைப்பற்றியது.

மேலும், இந்த நகோர்னோ-கராபத் மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. அன்றிலிருந்து நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையமாகக்கொண்டு அர்மீனியா-அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

இடையில் சில ஆண்டுகளாக சற்று தணிந்திருந்த பதற்றம் கடந்த மாதம் 27ஆம் திகதி முதல் மீண்டும் தொடங்கியது. இரு நாடுகளின் படைகளும் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தனர்.