காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து பெறுவதற்காக போராட்டங்களில் இணைந்து செயற்படும் வகையில் எதிர்கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.
இது குறித்த ஆலோசனைக் கூட்டம் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பரூக் அப்துல்லா, “கடந்தாண்டு ஒகஸ்ட் 5திற்கு முன் முன் ஜம்மு – காஷ்மீரில் இருந்த நிலையே மீண்டும் தொடர வேண்டும். அதற்காக இணைந்து போராட புதிய கூட்டணியை அமைத்துள்ளோம்.
இது அரசியல் சாசனப் போராட்டம்.எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு நீக்கப்பட்டது. இதற்கு அங்குள்ள எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சில தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா மெஹபூபா முப்தி ஆகியோர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.