நியூசிலாந்து பொதுத் தேர்தலில், தற்போதைய பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். 77 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ஆர்டெர்னின் இடது சாரி தொழிற்கட்சி 49 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
தொழிற்கட்சியின் பிரதான எதிர்க்கட்சியான மத்திய-வலது தேசியக் கட்சி 27 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இதன் போது, தேசியத் தலைவர் ஜூடித் காலின்ஸ், தோல்வியை ஒப்புக் கொண்டதோடு, ஆர்டெர்னை வாழ்த்தியுள்ளார்.
முடிவுகள் இன்னும் கணக்கிடப்படுகின்றன. சிறப்பு வாக்குகள், வெளிநாடுகளில் வசிக்கும் நியூசிலாந்தர்கள் அளித்த வாக்குகள் உட்பட அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு மூன்று வாரங்களில் இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.
தொழிற்கட்சி கடந்த தேர்தலில் 37 சதவீதம் பெற்றிருந்தது. அதே நேரத்தில் அதன் தற்போதைய கூட்டணி பங்காளியான பசுமைக் கட்சி 7.6 சதவீதத்தினை பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 6.3 சதவீதத்தை பெற்றது.
தொழிற்கட்சி தனியாக ஆட்சி செய்ய முடியுமா?அல்லது பசுமைவாதிகளுடன் ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டுமா? என்பது குறித்த இறுதி முடிவுகள் வரும் வரை இது தெளிவாக இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.