பிரான்ஸின் பாரிஸ் புறநகர்ப் பகுதியில் வரலாற்று ஆசிரியர் ஒருவர் நேற்று மாலை, தலை துண்டிக்கப்பட்ட நிலையில், படுகொலை செய்யப்பட்டார். பாடசாலையின் அருகிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் அந்நாட்டு காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், குறித்த ஆசிரியர் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டியதால் கோபமடைந்த ஒரு நபர் அவரை கொன்றதாக தெரியவந்தது.
குறித்த குற்றவாளியை காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் பிரான்சில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி காவல்துறையினர் கூறுகையில், ‘நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை வகுப்பிற்கு காட்டியதால் ஆத்திரமடைந்த ஒரு நபர் அந்த ஆசிரியரின் தலையை வெட்டி கொலை செய்துள்ளார். அவரை கைது செய்ய முயன்ற போது, அவர் தப்பி ஓடினார். இதனால் அவர் சுட்டு கொல்லப்பட்டார்’ என கூறியுள்ளனர்.
மேலும், தாக்குதல் நடத்திய நபர், செசென் பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளைஞர் என்று தகவல் வெளியாகியுள்ளது.