கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஆயிரத்து 785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கிடையே தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டெங்குவின் பாதிப்பு அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை ஆரம்பிக்க உள்ளதால் டெங்குவின் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில் கொரோனா தொற்றுடன், டெங்குகாய்ச்சலும் பரவி வருவதால்மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் “தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் டெங்குவை பரப்பும் ஏடிஸ் நுளம்புகளை ஒழிப்பது அதன் உற்பத்தியை தடுப்பது போன்ற பல்வேறுநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை நாடுமுழுவதும் 16 ஆயிரத்து 439 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மழைக்காலம் தொடங்கியுள்ளதால் டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத் துறையின் இணை, துணை இயக்குநர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.