ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்வரும், திங்கட்கிழமை பேரறிவாளன் பிணையில் வெளியே வருகிறார்.
பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பிணை வழங்கி சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதி செய்துள்ளார். ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ளவர்களுக்கு சிறை விதிகளின்படி வழங்கப்படும் பிணைதான் இது.
கடந்த 2017ம் ஆண்டு பேரறிவாளன் பிணையில் வெளியே வந்தார். அதன் பிறகு தற்போது தான் பிணை வழங்கப்படுகிறது. இந்நிலையில், விதிகளுக்கு அப்பாற்பட்டு பேரறிவாளன் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபட கூடாது என சிறைத்துறை அவருக்கு நிபந்தனை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.