7 மாதங்களுக்குப்பின் மக்காவுக்கு வெளிநாட்டு யாத்திரீகர்களுக்கு அனுமதி!

சுமார் 7 மாதங்களுக்குப்பிறகு முதல் முறையாக மக்காவிலிள்ள கிராண்ட் மசூதிக்குள் வெளிநாட்டு யாத்திரீகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு யாத்திரீகர்களுக்கு அனுமதியளிக்கப்பட்ட முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,000 யாத்திரீகர்கள் உம்ரா யாத்திரை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மக்கா மசூதியின் மையத்தில் அமைந்துள்ள காபாவை சுற்றி வர யாத்திரீகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காபாவை நோக்கித்தான் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் நாள்தோறும் வழிபடுகிறார்கள்.

ஒவ்வொரு இஸ்லாமியரும் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது, தன்னால் இயலும் பட்சத்தில் இங்கு வரவேண்டும் என இஸ்லாம் கூறுகிறது. இங்கு வரும் இஸ்லாமியர்கள் காபாவை எதிர் கடிகாரச் சுற்றில் ஏழு முறை வலம் வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாட்டு யாத்திரீகர்களுக்கு இங்கு கடந்த 7 மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

கிராண்ட் மசூதியின் மையத்தில் உள்ள இஸ்லாத்தின் புனிதமான தலமான காபாவைச் சுற்றி வர அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, வெளிநாட்டு யாத்ரீகர்கள் சவுதி அரேபியாவுக்கு வந்த பின்னர் மூன்று நாட்கள் தங்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுபோல தனி மனித இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் மக்காவிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

சவுதியில் படிப்படியாக பொது முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதை தொடர்ந்து அந்த நாட்டு அரசாங்கம் படிப்படியாக அங்குள்ள மசூதிகளையும் திறந்து வருகிறது.

ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபரங்களின்படி சவுதி அரேபியாவில் கொரோனாவால் 347656 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 5,420 உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.