புன்னகை எனும் அற்புத மருந்து!

unnamed 1 10
unnamed 1 10

விலங்குகளுக்கும் கிடைத்திராத மனிதர்களுக்காக கிடைத்த மிகப் பெரும் வரப்பிரசாதம் புன்னகை. மனிதர்களால் மிகவும் எளிதாக செய்யக் கூடிய காரியம் புன்னகை செய்வதைத் தவிர வேறெதுவும் இருக்காது.

புன்னகைப்பதன் மூலமாக பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழி கிடைக்கிறது. புன்னகைப்பது குறித்து நிபுணர்கள் பலர் சிறந்த கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

புன்னகை செய்வதன் வாயிலாக மனஅமைதியும் தெளிவான சிந்தனையோட்டமும் கிடைக்கிறது.

சுற்றியிருக்கும் அனைத்தையும் மறந்து புன்னகை செய்யும் போது வேறெந்தவித எண்ண அலைகளும் மனக் கோட்டைகளுக்குள் சஞ்சரிப்பதில்லை. ஆகையால் மனம் ஆழ்கடல் போல் அமைதியை அடைகிறது. உடலுக்கும் மனதுக்கும் எந்தவித மருந்துகளாலும் தர முடியாத பல நன்மைகளை புன்னகை எனும் அற்புத மருந்து தந்துவிடுகிறது.

துன்பத்திலும் புன்னகை செய்யப் பழக வேண்டும் என்று பெரியோர் கூறக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதன் உண்மையான பொருளை அறிவியல்ரீதியில் நாம் உணரத் தவறி விடுகிறோம். இன்பம், துன்பம், மகிழ்ச்சி, சோகம் அனைத்தும் நம் மனதில் நிகழ்பவையே.

நம் மனதில் தோன்றும் எண்ணங்களே நமது செயலையும் நடத்தையையும் தீர்மானிக்கின்றன. நாம் மகிழ்ச்சியாக இருப்பதாக எண்ணிக் கொண்டால் அதற்கேற்ப நமது செயல்கள் இருக்கின்றன. நாம் சோகமாக இருப்பதாக எண்ணிக் கொண்டால் அதைப் பொருத்தே நமது செயல்களும் அமைகின்றன.

எனவே, சோகமாக இருக்க வேண்டிய தருணங்களிலும் மகிழ்ச்சியாக இருப்பதாக மனதை வடிவமைத்துக் கொண்டால் நமது செயல்பாடுகளிலும் மாற்றங்களைப் புகுத்த முடியும். நமது எண்ணங்களைத் தீர்மானிப்பதில் முகத் தசைகளுக்கு முக்கியப் பங்குள்ளது.

புன்னகை செய்வதற்கு எந்தவிதக் காரணமும் தேவையில்லை. உதாரணமாக பேருந்துப் பயணத்தின்போது தாயின் மடியில் அமர்ந்து குழந்தை விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டால் நமக்கு புன்னகை ஏற்படுவது இயற்கையே. மழை, வானவில், பெளர்ணமி நிலவு, இரவின் மடியில் தவழும் விண்மீன்கள் ஆகியவற்றைக் காணும்போதும் மகிழ்ச்சி ஊற்று பெருக்கெடுத்து புன்னகை நதியாகப் பாய்கிறது.

இவையனைத்தும் நகைச்சுவை என்ற வரையறைக்குள் அடங்காதவை. எனினும், இவற்றை உணரும்போது நாம் புன்னகை செய்யத் தவறுவதில்லை. இப்படி புன்னகை செய்யும் பழக்கத்தை சோகமான தருணங்களிலும் வரவழைத்துக் கொள்ள வேண்டும்.

குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், அலுவலகத்தின் சக ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் மகிழ்ச்சியாகப் பழகுவதன் மூலமாக புன்னகை புரிவதை நமக்குள் கொண்டு வந்துவிடமுடியும். நாம் புன்னகை புரிவதால் நமக்கு மட்டும் அதன் பலன் கிடைக்காமல் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் கிடைக்கிறது.

ஒவ்வொரு நாள் நிறைவடையும்போதும் நமது வாழ்வு குறைந்துகொண்டே போகிறது என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டால், கவலைப்படுவதை விடுத்து புன்னகையோடு மகிழ்ச்சியான வாழ்வை நடத்துவதற்கான உத்வேகம் ஏற்படும்.