அசுரன் படத்திற்கு பிறகு தனுஷின் சினிமா மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இடையில் வந்த பட்டாஸ் படம் சுமாரான வெற்றியை பெற்றாலும் தனுஷின் மார்க்கெட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
அசுரன் படத்திற்கு பிறகு தனுஷ் இதுவரை வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தை இரண்டு மடங்கு அதிகரித்து விட்டதாகவும் தகவல்கள் கிடைத்தது. மேலும் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என சூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குனர்களுடன் கூட்டணி சேர்ந்தார்.
இந்நிலையில் அடுத்ததாக மயக்கம் என்ன படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளாராம். இந்த தகவல் முன்னரே அரசல்புரசலாக வந்திருந்தாலும் தற்போது செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இலை மறை காயாக தெரிவித்துள்ளார்.
மேலும் செல்வராகவனிடம் ரசிகர்கள் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் செல்வராகவனை பொறுத்தவரை இது ஒரு புதுவிதமான படம் என்பதில் தெளிவாக இருக்கிறார்.
மேலும் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு எப்போதுமே பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இந்த புதிய படம் தற்போது உருவாக வாய்ப்பு இல்லை எனவும், குறைந்தது இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும் எனவும் தெரிகிறது.
எது எப்படியோ, இந்த கூட்டணி இணைந்தால் தனுஷ் ரசிகர்கள் அனைவருக்கும் கொண்டாட்டம் தான் என்பது மட்டும் உறுதி.