நடிகை சஞ்சனா கல்ராணிக்கு பிணை வழங்கியது கர்நாடகா உயர் நீதிமன்றம்!

95743
95743

போதைப்பொருள் வழக்கில் நடிகை சஞ்சனா கல்ராணிக்கு கர்நாடகா உயர் நீதிமன்றம் பிணை வழங்கி உள்ளது.

கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் குறித்து, மத்திய குற்றப்பிரிவு இணை காவல்துறை ஆணையாளர் சந்தீப் பட்டீல் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகின்றது.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, இவர்களது நண்பர்கள் ரவிசங்கர், ராகுல், போதைப்பொருட்கள் விற்பனையாளர்கள் லோயம் பெப்பர் சம்பா, வீரேன் கண்ணா, வைபவ் ஷெட்டி, பிரதிக் ஷெட்டி உள்பட 14க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உட்பட 14 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் காட்டன்பேட்டை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இந்த விவகாரத்தில் கைதான நடிகைகள் 2 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

போதைப்பொருள் விசாரணை வழக்கில் நடிகை சஞ்சனா கல்ராணி கடந்த செப்டம்பர் 8ஆம் திகதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்து இருந்தார்.

குறித்த பிணை மனுவில், தனக்கு உடனடியாக மருத்துவ அறுவை சிகிச்சை தேவை என்றும் பிணை கிடைக்காவிட்டால் தனக்கு ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது என கூறி இருந்தார்.

நீதிமன்றம் அவரை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள உத்தரவிட்டது அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் சஞ்சனா கல்ராணிக்கு தற்போது பிணை வழங்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் விசாரணை வழக்கில் சஞ்சனாவுடன் நடிகர் ராகினி திவேதியும் கைது செய்யப்பட்டார். இருப்பினும், ராகினிக்கு தற்போது வரை பிணை வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.