கொரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக தொலைக்காட்சி நடிகை காஜல் பிசால் தெரிவித்துள்ளார்.
ஹிந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் காஜல் பிசால், கொரோனா வால் பாதிக்கப்பட்டுள்ளார். தன்னுடைய அனுபவங்கள் குறித்து அவர் கூறியுள்ளதாவது:
என் வாழ்க்கையின் மோசமான காலக்கட்டத்தில் உள்ளேன். எனக்கு கொரோனா தொற்று ஏற்படும்போது அறிகுறிகள் இருந்தன. மற்றபடி நன்றாக இருந்தேன். நான் ஒரு மாதம் ஓய்வெடுக்க வேண்டும் என்றார் என்னுடைய மருத்துவர். ஒரு வாரம் அல்லது 14 நாள்களில் எனக்கு எல்லாம் சரியாகிவிடும் என என் நண்பர்களும் சொன்னார்கள். ஆனால் நாள் செல்லச் செல்ல என்னுடைய நிலை என்னை பாடாய்படுத்துகிறது.
தலைச்சுற்றலால் அவதிப்பட ஆரம்பித்துள்ளேன். என்னுடைய உடல் மீதான கட்டுப்பாட்டை இழந்துள்ளேன். இது அச்சமூட்டுகிறது. தற்போது நான் மீண்டு வருகிறேன். இன்னும் பலவீனமாக உணர்கிறேன். மனம் தளர்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு என் மரணப் படுக்கையை அருகில் பார்த்துள்ளேன்.
கொரோனா என்பது சாதாரணமானது, தனிமைப்படுத்திக் கொண்டால் சரியாகிவிடும் என நினைப்பவர்களுக்கு – இதை அலட்சியமாக எண்ண வேண்டாம். அச்சமூட்டுகிறது. இது ஒரு துர்கனவு. என் வாழ்க்கையில் இத்தனை நாள்கள் படுக்கையில் கிடந்ததில்லை. இப்போது எனக்கு வேறு வழியில்லை.
என் கணவர், மகளை விட்டு இருப்பது என்னைக் கலவரப்படுத்துகிறது. வேதனைக்குள்ளாக்குகிறது. அவர்கள் அருகில் செல்ல இன்னும் அச்சமாக உள்ளது. கொரோனாவிலிருந்து விடுபட்டாலும் அவர்களை அணைத்துக்கொள்ள தைரியம் வருமா எனத் தெரியவில்லை. கொரோனாவால் ஏற்படும் வலிகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். கவனமாக இருங்கள் என்று கூறியுள்ளார்.