ரஜினியின் அடுத்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவில்லை

Periyasamy 2
Periyasamy 2

துல்கர் சல்மானின் 25-வது படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. புதுமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய இப்படம் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டினர். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினார். முடிந்தால், தனக்கும் ஒரு கதை தயார் செய்யும்படி ரஜினி கேட்டிருந்தார்.

இதையடுத்து, இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, ரஜினிக்காக ஒரு கதை தயார் செய்ததாகவும், அந்தக் கதையை ரஜினியிடம் சொல்லி சம்மதம் வாங்கியதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. மேலும் ரஜினியின் அடுத்த படத்தை இவர் இயக்க உள்ளதாகவும் செய்திகள் வலம்வந்தன.

இந்நிலையில், இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள தேசிங்கு பெரியசாமி, டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “என்னுடைய அடுத்த படம் குறித்து பரவும் செய்திகள் உண்மையில்லை. விரைவில் அடுத்த படம் குறித்து அறிவிப்பேன். தங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. பாதுகாப்பாக இருங்கள்” என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் ரஜினியின் அடுத்த படத்தை இவர் இயக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.