தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இவர் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு போடப்பட்ட சமயத்தில் இருந்து ஏழை எளிய மக்களுக்கு எண்ணிலடங்கா உதவிகளை செய்துள்ளார்.
தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தீவிரமாக பரவிவரும் நிலையில் நடிகர் சோனு சூட்டிடம் உதவி கேட்டு ஏராளமான அழைப்புகள், கோரிக்கைகள் குவிந்தவண்ணம் உள்ளது. அவர்களுக்கு தன்னால் இயன்றவரை உதவி வருகிறார் சோனு சூட்.
அந்தவகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில், கொரொனா நோயாளிகள் 22 பேர் ஒட்சிசன் இல்லாமல் உயிருக்கு போராடி வருவதாகவும், அவர்களைக் காப்பாற்ற உதவி கேட்டு நடிகர் சோனு சூட்டை அணுகி உள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு உடனடியாக ஒட்சிசன் சிலிண்டர்கள் கிடைக்க ஏற்பாடு செய்து கொடுத்து 22 பேரின் உயிரைக் காப்பாற்றி உள்ளார் சோனு சூட். அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.