ஜெயம் ரவி ஜோடியாகும் நடிகை ப்ரியா பவானி சங்கர்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

samayam tamil 8
samayam tamil 8

‘பொன்னியின் செல்வன்’ படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கவுள்ள புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் ஜெயம் ரவி, மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் ஜெயம் ரவி. இந்தப்படத்தை கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார்.

’பூமி’ படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வந்தார். அண்மையில், இந்தப்படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை நிறைவு செய்தார். இந்நிலையில் ஜெயம் ரவியின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த ‘பூலோகம்’ படத்தின் இயக்குநர் கல்யாண் தான், இப்படத்தையும் இயக்குகிறார்.

ஜெயம் ரவியின் 28வது படமான இந்த படத்தின் பூஜை நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜையில் படக்குழுவினர்கள் கலந்து கொண்டனர். இந்தப்படத்தில் கதாநாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார். இந்தப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார். மேலும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா பவானி சங்கர் இந்தியன் 2, யானை, பத்து தல உட்பட சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் ஜெயம் ரவி ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வெற்றி பெற்ற ஜெயம் ரவி – கல்யாண கிருஷ்ணன் கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.