சூர்யாவின் ஜெய்பீம் படத்தால் திரையரங்கு சங்கத்தினர் கொந்தளிப்பு!

photo 1
photo 1

சென்னை : சட்டத்தை மீறி நடிகர் சூர்யா ரசிகர்கள், ஜெய் பீம் படத்தை அரங்கத்தில் ஒளிபரப்பியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல ஆபாச படங்களையும் போட்டால் என்னவாகும் என்று திரையரங்க சங்க நிர்வாகிகள் கொந்தளித்துள்ளனர்.

நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள, ஜெய்பீம் படம் நவ., 1ல் ஓ.டி.டி.,யில் வெளியானது. இப்படத்தை, அரசின் திரைப்பட ஒளிப்பதிவு சட்டத்தை மீறி, திருப்பூர் குன்னத்துார் ஊராட்சியில், மினி ரசிகர்கள் காட்சி என அரங்கிற்குள், சூர்யா ரசிகர்கள் திரையிட்டுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, அவிநாசியில் உள்ள ஓட்டலில் நடக்க இருந்த ரசிகர்கள் காட்சி, புகாரின் அடிப்படையில் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து, தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியதாவது: உரிமம் பெற்ற திரையரங்குகளில் மட்டுமே, படங்களை வெளியிட வேண்டும். ஆனால், ‛ஜெய் பீம் படத்தை, சூர்யா ரசிகர்கள் ஓட்டல் உள்ளிட்ட பொது வெளியில் திரையிட திட்டமிட்டனர். புகாரின் அடிப்படையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சூர்யா தயாரித்த படத்தை எங்கு வேண்டுமானாலும் வெளியிடட்டும்; அதைப்பற்றி நாங்கள் எதுவும் சொல்லப் போவதில்லை. எங்களை பொறுத்தவரை நான்கு வாரங்களுக்கு பின்னரே படங்களை, ஓ.டி.டி.,க்கு தர வேண்டும். அப்போது தான் திரையரங்குகளில் படம் வெளியாகும்.

கண்டனம் தெரிவிப்பதோ, தடை செய்வதோ எங்கள் வேலை அல்ல. மாறாக இந்த மாதிரி சட்டத்திற்கு புறம்பாக படங்களை வெளியிடக்கூடாது. எங்கு வேண்டுமானாலும் பட்டாசு கடை போட முடியுமா? உங்கள் சவுகரியத்திற்கு படங்களை, கண்ட இடங்களில் போட்டால் எப்படி இன்று இந்தப்படம் வெளியானால், நாளை ஆபாசப் படங்களையும் இந்த மாதிரி வெளியிடுவர். கடந்த, 35 ஆண்டுகளுக்கு முன் காணொளி வந்த புதிதில், காணொளி பார்லர் வைத்துக் கொண்டு படங்களை திரையிட்டனர். அதுபோல, தற்போது படங்களை அரங்கில் வெளியிட நினைக்கின்றனர்.

இவ்வாறு போனால் சினிமா சட்டம் எதற்கு இருக்கிறது. தொலைக்காட்சி விளம்பரத்தில், காலையில் சூர்யா, கோப்பி குடியுங்கள் என்கிறார் அவர் தம்பி கார்த்தி, டீ குடிங்கள் என்கிறார். நான் காபி, டீ குடிப்பதில்லை அதனால் தான், 80 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று, அவர்களின் தந்தை சிவகுமார் கூறுகிறார். இவர்கள் பணத்திற்காக முரண்பாடாக பேசத்தான் செய்வர். எங்களை பொறுத்தவரை, எங்களுக்கான வியாபாரம் எப்போதும் உண்டு யாரையும் நாங்கள் வற்புறுத்துவதில்லை.

ஒவ்வொரு கால கட்டத்திலும், வெவ்வேறு வகையில் திரையரங்கு தொழிலுக்கு பாதிப்பு வந்தாலும், திரையரங்கு அனுபவம் என்றும் தோற்காது. திரையரங்கை காலத்திற்கு ஏற்ப மேம்படுத்தி வந்தால், நிச்சயம் திரையரங்கு தொழிலை யாரும் முடக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

சங்கத்தின் முன்னாள் நிர்வாகி அண்ணாமலை கூறுகையில், தீபாவளி முடிந்ததும் இதுகுறித்து பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சூர்யா ரசிகர்களை போல, மற்றவர்களும் ஆரம்பித்து விட்டால், அது திரையரங்கு தொழிலை நிச்சயம் பாதிக்கும் என்றார்.