ஜெய் பீம் சர்ச்சை ; சூர்யா கடிதம்!

Suriya Cinema Express
Suriya Cinema Express

ஜெய் பீம் திரைப்படம் தொடர்பான சர்ச்சைக் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியிருந்த நிலையில், நடிகர் சூர்யா அதற்குப் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

நடிகர் சூர்யா நடித்து தயாரித்திருந்த ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனிடையே குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக ஜெய் பீம் படம் குறித்து சர்ச்சைகள் எழுந்தன. பின்னர் படத்திலும் அந்தக் காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் இந்த சர்ச்சைக் குறித்து நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகள் அடங்கிய கடிதத்தை எழுதி சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா, இதற்குப் பதில் கடிதம் எழுதியுள்ளார். அன்புமணி ராமதாஸுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் இல்லை. படைப்புச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும் என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.

படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம். அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்டக் குரல், பெயர் அரசியலால் மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார் சூர்யா.