தமிழில் வெளியான எந்திரன் 2.0, சர்கார், பிகில், பொன்னியின் செல்வன் போன்ற பல்வேறு படங்களில் பாடிய பாடகர் பம்பா பாக்யா இன்று காலமானார்.
அவருக்கு வயது 49. தமிழ் திரையுலகில் ஏராளமான திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.
அப்படி அவரால் கண்டறியப்பட்ட ஒரு திறமையாளர் தான் பம்பா பாக்யா.
பாடகரான இவர், ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான ராவணன் படத்தில் இருந்தே பாடி வருகிறார்.
சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெறும் பொன்னி நதி என்கிற பாடலில் கூட ஏ.ஆர்.ரகுமான் உடன் இணைந்து பாடி இருந்தார்.
இந்நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக பாடகர் பம்பா பாக்யா இன்று மரணமடைந்துள்ளார்.
பாடகர் பம்பா பாக்யாவின் மரணம் கோலிவுட் வட்டாரத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவிற்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.