‘வர்மா’ வெளியீட்டில் பிரச்சினை!

i3 3 1
i3 3 1

தெலுங்கில் விஜய் தேவரகொன்டா நடித்து வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் ‘அர்ஜுன் ரெட்டி’. அப்படத்தின் தமிழ் மொழிமாற்றத்தில் நடிகர் விக்ரம் மகன் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

படத்தைத் தன் குரு பாலா தான் இயக்க வேண்டும் என அடம் பிடித்து இயக்க வைத்தார் விக்ரம்.

ஆனால் படத்தை முடித்து போட்டுப் பார்த்த பின் பாலா இயக்கிய ‘வர்மா’ படத்திற்கும், ‘அர்ஜுன் ரெட்டி’ படத்திற்கும் அடிப்படைக் கருவைத் தவிர வேறு எதுவுமே பொருத்தமில்லை என்று சொல்லி அப்படத்தை வெளியிடுவதை நிறுத்தினார்கள்.

பின்னர் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இணை இயக்குனரான கீரிசய்யா இயக்கத்தில் ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் மீண்டும் படமெடுத்து வெளியிட்டார்கள். படம் ஓரளவிற்குத்தான் வெற்றி பெற்றது.

இந்நிலையில் பாலா இயக்கியுள்ள ‘வர்மா’ படத்தை வெளியிடும் முயற்சியில் அதன் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் அது பற்றி அவர் தெரிவித்துள்ளார்.

படம் வெளிவந்து வரவேற்பைப் பெற்றால் அந்தப் படத்தை நிறுத்தியது தன் தவறுதான் என ஒப்புக் கொள்வதாக அவர் கூறியிருக்கிறார். ‘வர்மா’ வெளியீட்டில் உள்ள சில பிரச்சினைகளைத் தீர்க்க தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில் பாலாவின் ‘வர்மா’ வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளிவரும்.