தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஜூன் 23ந் திகதி தேர்தல் நடந்தது. இதில் விஷால் தலைமையில் ஒரு அணியும், கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும் மோதியது.
தேர்தல் நடந்தாலும் வாக்குகளை எண்ண நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நடந்து முடிந்த தேர்தல் செல்லாது, மறுதேர்தலை 3 மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து விஷால் அணியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 2 நீதிபதிகள் அடங்கிய பென்ஞ் நேற்று முன்தினம் இதனை விசாரித்து தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த நிலையில் கே.பாக்யராஜ் மற்றும், ஐசரி கணேசன் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்: தேர்தல் பணிகள் தொடங்கி உள்ள நிலையில் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவை ஏற்கிறோம். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டோம், ஏற்கனவே நடந்து முடிந்த தேர்தலின் வாக்குகளை எண்ணினாலும், புதிய தேர்தல் நடந்தாலும் எதையும் ஏற்போம். நீதிமன்றம் செல்ல மாட்டோம்.
நலிந்த நடிகர்கள் 450 பேருக்கு கடந்த 6 மாதமாக மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படவில்லை. அதனை உடனே வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் முகவரியை எங்களுக்கு தந்தால் நாங்கள் வழங்குவோம். என்றார்கள்.