என் குடும்பத்தை ஏன் இழுக்கிறீர்கள் – ஷெரீன் கோபம்

i3 2 3
i3 2 3

நடிகை ஷெரின், தன் மீதான விமர்சனங்கள் குறித்து, யாரையும் பெயர் குறிப்பிடாமல் சமூகவலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

துள்ளுவதோ இளமை, விசில் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ஷெரின், கடந்த ஆண்டு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான தர்ஷன் மீது நட்பு பாராட்டி வந்த ஷெரினுக்கு, அவர் மீது காதல் இருப்பதாகவும் பேசப்பட்டது.

ஆனால், தர்ஷன் தனக்கு வெளியில் ஒரு காதலி இருப்பதாக தெரிவித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின், தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக, அவரது காதலி ஷனம் ஷெட்டி பொலிசில் புகாரளித்தார்.

இதையடுத்,து தர்ஷன் -ஷனம் ஷெட்டி இருவரும் மாற்றி மாற்றி குற்றச்சாட்டுகளைக் கூறி, பிரிந்து விட்டனர். அப்போது நடிகர் தர்ஷன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது.

ஷெரினிடம் கூட எங்களுக்கு நடந்த நிச்சயதார்த்தத்தை தெரிவித்து விட்டேன். அதனால், அவர் என்னிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார். ஷனம் ஷெட்டி சொல்லித்தான் ஷெரினின் சமூகவலைத்தள பக்கத்தை தொடர்வதை நிறுத்தினேன் என்றார்.

இருந்த போதும், ஷனம் ஷெட்டி – தர்ஷன் இருவரும் பிரிய, ஷெரின் தான் காரணம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அதுகுறித்து எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார் ஷெரின். இந்நிலையில், அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது.

கடந்த ஒரு மாத காலமாக என்னைப் பற்றி அதிகம் பேசப்பட்டு விட்டது. என்னை யாராவது தாக்கிப் பேச வேண்டும் என்றால், அதை செய்யுங்கள். நானே அதற்கு ஒப்புதல் தருகிறேன். என் மீதான மோசமான விமர்சனத்தை புன்னகையுடன் கடந்து செல்கிறேன்.

ஆனால், என்னுடைய குடும்பத்தை மட்டும் விட்டுவிடுங்கள். முகம் தெரியாத போலி சமூகவலைதள கணக்குகளை வைத்துக் கொண்டு வசைபாடுவதையும், ட்ரோல் செய்வதையும் ஏற்க முடியாது. அதற்கு பதிலளிக்க விரும்பவில்லை.

யாரோ செய்த தவறுக்காக என்னை பழி சொல்வது, எனக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தாது. அதில், உங்களது குறுகிய மனப்பான்மை தான் வெளிப்படுகிறது. நான் அமைதியாக இருப்பது, என்னுடைய பலவீனமாக நினைக்க வேண்டாம். நான், இந்த விவகாரத்தில் தொடர்பில்லாததால் பேசாமல் இருக்கிறேன்.

இரண்டு பேர் காதல் முறிவு செய்து கொள்வதை விட, முக்கிய பிரச்னைகள் நிறைய இந்த உலகத்தில் உள்ளன. கோபமாக இருப்பவர்களுக்கு எனது கமெண்ட் பகுதியில், அதைக் கொட்டித் தீர்ப்பது அவர்களுக்கு அமைதியைக் கொடுக்கும் என்றால், அதையும் அவர்கள் செய்யலாம்.

அது என்னையும் என்னுடைய மதிப்பீடுகளையும் மாற்றாது. எனக்காக சண்டை போடுபவர்களும், என்னுடன் சண்டை போடுவபர்களும் கிடைத்ததால் நான் அதிர்ஷ்டசாலி தான்.

இதுதான் என்னுடைய அதிகாரப்பூர்வ அறிக்கை. இதைப்பற்றிய கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் நான் இனி பதில் சொல்லமாட்டேன்.