18 ஆயிரம் தினக்கூலி பணியாளர்கள் வேலை இன்றி தவிப்பு

i3
i3

கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக ஊரடங்கு பிறப்பிப்பதற்கு முன்பே அதாவது மார்ச் 19ந் திகதியில் இருந்தே படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. தியேட்டர்கள் மூடப்பட்டது. இதனால் திரைப்படத் தொழில் இருக்கும் சுமார் 18 ஆயிரம் தினக்கூலி பணியாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள்.

பெரிய நட்சத்திரங்களின் உதவியால் அன்றாட தேவைகளை சமாளித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது மூன்றாம் கட்டமாக ஊடரங்கு நீட்டித்திருக்கும் நிலையில் எடிட்டிங், டப்பிங் போன்ற போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பெப்சி அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக பெப்சி முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தற்போது ஊரடங்கு சட்டம் போடப்பட்டு ஏறக்குறைய 50 நாட்களை தொட இருக்கிறோம். கொரோனா வைரஸ் பாதிப்பினை கருதி மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு அறிவிப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பே தமிழ் திரைப்படத்துறையின் அனைத்து வேலைகளையும் நிறுத்தி ஏறக்குறைய இன்றோடு 50-வது நாளை கடக்க உள்ளோம்.

தமிழ்த்திரைப்பட துறையினர் நலவாரியம் மூலம் ஆயிரம் ரூபாயும், தமிழ்த்திரைப்பட கலைஞர்கள் மூலம் பெறபட்ட நன்கொடை வழியாக 1,500 ரூபாய்க்கான உணவுப்பொருள்களும், அமிதாப் பச்சன் மூலம் தனியார் நிறுவனங்கள் வழங்கிய ரூ.1,500 மதிப்பிலான உணவுப்பொருள்களும் ஏறக்குறைய ரூ.4,000 ரூபாய்க்கான உணவுப் பொருள்களை வைத்து இந்த 50 நாள் வேலை முடக்கத்தில் பசிப்பிணியில் இருந்து எங்கள் தொழிலாளர்களை காப்பாற்றி உள்ளோம்.

இனியும் வேலை முடக்கம் நீடிக்கப்பட்டால் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பித்த தொழிலாளர்கள் பட்டினி சாவுகளை எதிர்நோக்க வேண்டிய அபாயகரமான சூழ்நிலையில் உள்ளார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்போது 17 தொழில் துறைகளுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியிருப்பதைப் போல் திரைப்படத்துறைக்கும், தொலைக்காட்சிகளுக்கும் நிபந்தனைகளோடு அனுமதி வழங்கிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

குறைந்தபட்சம் திரைப்படங்களுக்குப் படப்பிடிப்பு அல்லாத பணிகளான ரெக்கார்டிங், ரீ -ரெக்கார்டிங், டப்பிங் போன்ற போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கும் தொலைக்காட்சி படப்பிடிப்பிற்கும் அனுமதி வழங்கினால் சம்மேளனத்தின் 40, 50 சதவீத தொழிலாளர்கள் வேலை செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த பணிகளை சமூக இடைவெளியுடன் பணி செய்ய வைக்க இயலும், என்பதால் திரைப்படங்களுக்கு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கும் மற்றும் தொலைக்காட்சி பணிகளுக்குமான அனுமதி வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மத்திய, மாநில அரசுகள் விதிக்கின்ற அனைத்து கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் ஏற்று இந்த பணிகளை சமூக இடைவெளியுடன் மருத்துவ பாதுகாப்புகளுடன் சுகாதாரமான முறையில் செய்வோம் என்று உறுதி அளிக்கின்றோம்.

இவ்வாறு அந்த கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.