ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்ட விஜய்

257059 vijay
257059 vijay

கொரோனா பரவல் அதிகமாகி வருவதால், தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிற்குமாறு நடிகர் விஜய், ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் விஜய்க்கு எதிர்வரும் 22ஆம் திகதி பிறந்த நாள் என்பதால் அவரது ரசிகர்கள், அனைத்து மாவட்டங்களிலும் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பேனர்கள் வைத்தல், கொடி தோரணங்கள் கட்டுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபட உள்ளனர். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இது பற்றிய தகவல் நடிகர் விஜய்க்கு தெரியவந்தது.

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி உள்ள இந்த நேரத்தில் ரசிகர்கள் நூற்றுக்கணக்கில் கூடி பிறந்த நாளை கொண்டாடுவதன் மூலம் நோய் தொற்று பரவலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.

இதையடுத்து தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்சி ஆனந்திடம் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை ரத்து செய்யும்படி அறிவுறுத்தி உள்ளார்.

இதையடுத்து அனைத்து மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்களுக்கும், பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று தொலைபேசி மூலமாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக ரசிகர்களின் வங்கி கணக்கில் விஜய் நேரடியாக பணம் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.