நடிகை ஐஸ்வர்யா ராய் உடல் நிலை பாதிப்பு

Aishwarya rai 1
Aishwarya rai 1

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 12 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இருவரும் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதையடுத்து பச்சன் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அபிஷேக் பச்சனின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கும் கொரோனா இருப்பது கடந்த 13 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. 

வைரஸ் அறிகுறிகள் சிறிய அளவில் இருந்ததால் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இதனால் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் இருவரும் கடந்த சில நாட்களாக வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், தனிமைப்படுத்திக்கொண்ட ஐஸ்வர்யாவுக்கும் அவரது மகளுக்கும் நள்ளிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனாவின் தாக்கம் அதிகமானதால் இந்த மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகளுடன் ஐஸ்வர்யா ராய்

இதையடுத்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் என இருவரும் மும்பையில் உள்ள நனாவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமித்தாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஏற்கனவே கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆராதியாவுக்கு கொரோனா தீவிரமடைந்ததையடுத்து இவர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.