ஐந்து முன்னணி இயக்குனர்கள் இணைந்து உருவாக்கிய புத்தும் புது காலை என்ற திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதிஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோருடன் சுஹாசினி மணி ரத்னமும் இணைந்து ‘புத்தம் புது காலை’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கியுள்ளனர்.
‘இளமை இதோ இதோ’ என்ற கதையை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.
‘அவரும் நானும்/ அவளும் நானும்’ என்ற கதையை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இதில் ரீத்து வர்மா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் ‘மிராக்கிள்’ என்ற கதையை இயக்கியுள்ளார். இதில் பாபி சிம்ஹா, முத்துக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
ராஜீவ் மேனன் இயக்கியிருக்கும் ‘ரீயூனியன்’ கதையில் ஆன்ட்ரியா, லீலா சாம்சன், குருச்சரண் ஆகியோர் நடித்துள்ளனர். சுஹாசினி மணிரத்னம் இயக்கி நடித்திருக்கும் ‘காஃபி எனி ஒன்’ கதையில் அவருடன் இணைந்து ஸ்ருதிஹாசன், அனுஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த ஆந்தாலஜி திரைப்படம் அக்டோபர் 16-ஆம் தேதி 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் பிரைம் தயாரிப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் ‘புத்தம் புது காலை‘ திரைப்படம் ஊரடங்கு தளர்வின் போது படப்பிடிப்பிற்காக தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனம் (FEFSI) வகுத்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்றி படமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.