25 ஆயிரம் ரூபாய் கடனை அடைக்க முடியாத சூழ்நிலை முதல் முறை நடிக்க வந்தேன் -நடிகர் சூர்யா

singam800 1
singam800 1
25 ஆயிரம் ரூபாய் கடனை அடைக்க முடியாத சூழ்நிலை முதல் முறை நடிக்க வந்ததாக நடிகர் சூர்யா நேர்காணல் ஒன்றில் கூறிய தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நான் எட்டாவது படிக்கும் போதே பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்தப் படங்களில் நடிக்க எனக்கு அப்போது விருப்பமில்லை.
அதன் பின்னர் நான் படித்து முடித்துவிட்டு வேலைக்கு சென்று விட்டேன். இதை சொன்னால் நம்ப கூட மாட்டார்கள், ஒரு கட்டத்தில் என்னுடைய குடும்பத்தில் ஒரு 25 ஆயிரம் ரூபாய் கடனை அடைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.அப்போது நான்தான் மூத்த மகன் என்ற பொறுப்பில் இருந்ததால் அந்த கடனை அடைக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன்.அதனால் சினிமாவில் நடிக்கலாம் என்று முடிவு செய்தேன். அப்போது வேலைக்கு தினமும் ஒரு 80 கிலோமீட்டர் பயணம் செய்து வருவேன்.

நான் சினிமாவில் நடிக்க போகிறேன் என்று சொன்னபோது நீ எல்லாம் நடிக்க போறியா டா என்று என்னுடைய நண்பர்கள் கேலி செய்தார்கள். ஆனால், என்னுடைய பழக்கம் என்னவென்றால் ஒரு விஷயத்தை முடிக்க முடியாது என்று சொன்னால் அதை நான் முடித்து காட்டுவேன் என்று அதை நான் செய்வேன்.

வீட்டிலும் அப்படித்தான் ஏதாவது என்னிடம் உன்னால் முடியாது என்று சொன்னால் அதை நான் எப்படியாவது செய்து காட்டி விடுவேன்.அப்படித்தான் நான் நடிகன் ஆனதும். முதன்முதலில் நான் சினிமாவில் பணத்திற்காக தான் நடிக்க வந்தேன்.

என்னுடைய முதல் படமான நேருக்கு நேர் படத்தில் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்தது.அதை அப்படியே எடுத்து வந்து அம்மாவிடம் கொடுத்து விட்டேன். நான் நடிகனாக மாறுவேன் என்றெல்லாம் நினைக்கவில்லை. எனக்கான ஒரு திருப்புமுனை ஏற்பட்டது அதை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டேன்.

நான் இப்போதும் அதைத்தான் சொல்கிறேன் உங்களுக்கு ஏதாவது ஒரு வாய்ப்பு வந்தால் அதை உதாசீனப்படுத்தாமல் பயன்படுத்திப்பாருங்கள்.அதை அப்படியே விட்டு விடாதீர்கள். நான் நேருக்குநேர் படத்திற்கு பின்னர் சரவணன் என்ற பெயரில் இருந்து சூர்யாவாக மாறி அப்படியே படிப்படியாக ஒரு நடிகனாக மாறிவிட்டேன்.