14 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் சூர்யா – ஜோதிகா

image 2
image 2

நட்சத்திர தம்பதிகளான சூர்யா – ஜோதிகா கடைசியாக இணைந்து நடித்த படம் சில்லுனு ஒரு காதல். கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஒரு மிகச்சிறந்த படமாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில்தான் சூர்யாவும், ஜோதிகாவும் முதன் முதலாக இணைந்து நடித்தனர். அதன்பின் காக்க காக்க, பேரழகன், சில்லுனு ஒருகாதல் என அவர்கள் இணைந்து நடித்தனர். அதன்பின் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

இருவரும் மீண்டும் எப்போது சேர்ந்து நடிப்பார்கள் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். சமீபத்தில் கூட பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசிய சூர்யா, அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடிக்க உள்ள படத்தை ஹலிதா ஷமீம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்கி பிரபலமானவர். மேலும் இப்படத்தை மலையாள இயக்குனர் அஞ்சலி மேனன் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.