நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பொஸ்-03 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா.
இவரது தந்தை, மரியநேசன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இச் செய்தி லொஸ்லியா ரசிகர்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில் லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணமடைந்த செய்தி அறிந்த சேரன், டுவிட்டரில் உருக்கமாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
லொஸ்லியாவும், சேரனும் பிக்பொஸ் 3-வது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள். அப்போது சேரனைப் பார்க்கும்போது தனது அப்பாவை பார்ப்பது போல் இருப்பதாகக் கூறிய லொஸ்லியா, அவர் மீது அதிக பாசம் கொண்டிருந்தார். சேரனும் அவரை தன் மகள் போல கவனித்து வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணமடைந்த செய்தி அறிந்த சேரன், டுவிட்டரில் ”லொஸ்லியா… தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது நன்றாகத் தெரியும். இந்தச் செய்தி என்னையே உலுக்குகிறது.
எப்படித் தாங்குவாய் மகளே. சொல்ல முடியாத துயரில் துடிக்கும் உனக்கும் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதெனத் தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.