வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் குறிசொல்லும் கோடாங்கியாக பெரிய மீசையுடன் நடித்த நடிகர் தவசி புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு தேவையான உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன் சூரியுடன் இணைந்து குறி சொல்பவராக கலகலப்பூட்டியவர் நடிகர் தவசி.
அதே போல ரஜினி முருகன் படத்திலும் பஞ்சாயத்து செய்யும் பெரியவராக நடித்திருப்பார். அழகர் சாமியின் குதிரை படத்திலும் குறி சொல்பவராக நடித்து அனைவரையும் சிரிக்க வைத்தவர் தவசி.
கொரோனா ஊரடங்கிற்கு முன்பு வரை நடிகர் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார். ராசாத்தி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த போது விபத்தில் சிக்கிய தவசி, தொடந்து ஊரடங்கால் படப்பிடிப்பு இன்றி முடங்கினார்.
இடையில் புற்று நோய் தீவிரம் அடைந்ததால் தவசியின் உடல் நிலை பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து மீசையின்றி பரிதாபமாக காட்சி அளிக்கின்றார்.
வீரப்பன் போல முரட்டு மீசையுடன் கம்பீரக்குரலோடு சினிமாவில் முகம் காட்டிய நடிகர் தவசி, தற்போது மதுரை நரிமேட்டில் உள்ள திமுக எம்.எல்.ஏ சரவணனின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவிப்பதாகவும் நடிகர்கள், திரை உலகினர், தொழில் நுட்பகலைஞர்கள் தனக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.