பிரபல நடிகையும் அரசியல் வாதியுமான குஷ்பு சுந்தர் சி பயணித்த கார் விபத்துக்குள்ளானதில் அவர் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் முருகன் வேல் யாத்திரை ஒன்றை முன்னெடுத்து வரும் நிலையில் நடிகை குஷ்பு இந்த வேல் யாத்திரையில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து இன்று காலை தனது காரில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் நோக்கி பயணித்துள்ளார்.
அவர் பயணித்த கார் மதுராந்தகம் அருகே உள்ள அய்யனார் கோவில் என்ற இடத்தை அன்மித்தப்போது முன்னால் கண்டெய்னர் லொரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த அந்த கண்டெய்னர் லொரியை குஷ்பு பயணித்த கார் முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிர்பாராத விதமாக காரில் இடது பக்கத்தில் கண்டெய்னர் லொரி வேகமாக மோதியுள்ளது.
சிறிது தூரம் வரை கண்டெய்னர் லொரி காருடன் உரசியபடியே சென்றுள்ளது. இதில் காரின் பின் இருக்கை பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.
காரின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த குஷ்பு அதிர்ச்சி அடைந்ததுடன் உடனடியாக குஷ்புவின் கார் ஓட்டுனர் சாமர்த்தியமாக காரை திருப்பி ஓரமாக நிறுத்தியுள்ளார்.
இதன் காரணமாக குஷ்பு அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியுள்ளார்.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தமிழ்நாட்டு காவல்துறையினர் கண்டெய்னர் சாரதியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
எனினும் இது திட்டமிட்ட தாக்குதல் என குஷ்பு தெரிவித்துள்ளார்.