விரலி மஞ்சளின் மருத்துவ குணங்கள்!

New Project 10 1
New Project 10 1

மஞ்சள் கிழங்கில் மூன்று வகை உள்ளது. முதல் வகை முட்டா மஞ்சள் என்று அழைக்கப்படுகிற முகத்துக்குப் போடும் மஞ்சள். இரண்டாம் வகை தட்டையாக, நிறைய வாசனையோடு இருக்கும் கஸ்தூரி மஞ்சள். மூன்றாவது வகை நீட்ட நீட்டமாக இருக்கும் விரலி மஞ்சள். ‌விரலை‌ப் போ‌ன்று ‌நீளமாக இரு‌ப்பதால் இதற்கு ‌விர‌லி ம‌‌ஞ்ச‌ள் என பெயர் வந்தது. விரலி மஞ்சள் தா‌ன் சமையலறையின் முதற்பொருள். இந்த மஞ்சளுக்குக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருக்கிறது.

மஞ்சளில் உள்ள குர்க்குமின் என்ற நிறமிதான் அதன் மஞ்சள் நிறத்துக்குக் காரணமாக உள்ளது. இந்த ரசாயனப் பொருள் புற்றுநோய்க் கட்டி ஏற்படாமல் தடுக்கவும், ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கவும், பாக்டீரியாக்களின் தாக்குதலை முறியடிக்கவும் உதவுகிறது.


நம் அன்றாட உணவில் விரலி மஞ்சளை சேர்த்துக்கொண்டால் ரத்தச்சோகை பிரச்னையே ஏற்படாது.
சிலருக்கு மூக்கடைப்பு பிரச்னையால் இரவில் தூக்கம் வராது. அவர்கள் விரலி மஞ்சள் கிழங்கை தீயில் சுட்டு, அதிலிருந்து வரும் புகையை நுகர்ந்து பார்த்தால் மூக்கடைப்பு சரியாகும்.


விரலி மஞ்சளில் அதிக கிருமி நாசினி இருக்கிறது. இதனால் வீட்டின் வாசற்படிகளில் மஞ்சளை கட்டிவிடலாம் அல்லது இந்த மஞ்சள் தூளை தண்ணீரில் கரைத்து அந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளிப்பது விடலாம். இதனால் பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுக்கள் பரவாது.

மாலை நேரத்தில் விரலி மஞ்சள் தூள் கலந்த பாலை தினமும் குடித்துவந்தால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, நோய்த்தொற்று பாதிப்புகளும் தடுக்கப்படும்.


விரலி மஞ்சள், குப்பைமேனி இரண்டையும் தேவையான அளவு எடுத்து அரைத்து உடலில் பூசிவந்தால் சருமப் பிரச்னைகள் அனைத்தும் சரியாகும்.

விரலி மஞ்சள் தூளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். இந்த வெந்நீரால் வாய் கொப்பளித்தால் தொண்டைப்புண் ஆறுவதோடு, சளி முறிந்து எளிதில் வெளியாகும்.


அருகம்புல்லுடன், விரலி மஞ்சளைச் சேர்த்து அரைத்து வியர்க்குரு மற்றும் வேனல் கட்டிகளில் தடவி இரண்டு மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இதுபோல் தொடர்ந்து செய்து வர வியர்க்குரு பிரச்சனைகள் அறவே நீங்கிவிடும்.


சம அளவு மஞ்சளையும், மிளகையும் அரைத்து மோரில் கலந்து குடித்தால் பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் வயிற்று வலி கட்டுப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.