சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவதன் நன்மைகள்!

135584 thumb
135584 thumb

நாம் அதிகமாக எப்பொழுதும் காலை தொங்கப்போட்டு அமர்ந்திருக்கிறோம். வாகனங்களில் பயணிக்கும் பொழுது, பேருந்து, இரயில் வண்டிகளில், சினிமா திரையரங்குகளில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம். இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வது தவறான முறையாகும். அப்படி அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகின்றன.

சம்மணமிட்டு அமர்ந்து, நமக்கு முன்னே இருக்கும் உணவைக் குனிந்து நிமிர்ந்து எடுத்துச் சாப்பிடும்போது, வயிற்றுத் தசைகளுக்கும் உள்ளுறுப்புகளுக்கும் நல்ல பயிற்சி கிடைக்கும் அதனால் செரிமானச் சுரப்பிகளும் தூண்டப்படும். சம்மணமிட்டு உணவருந்துவதால் ‘பசி அடங்கிவிட்டது’ என்ற உணர்வை மூளைக்குக் கடத்தும் நரம்பின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.

அதுவே நாற்காலியில் அமர்ந்து உணவருந்தினால், அந்த உணர்வு உடனடியாக மூளைக்குக் கடத்தப்படாமல், கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்ளும். இதனால் அதிக உணவு சாப்பிட நேரிடும். தேவைப்படும் கலோரிகளைவிட, அதிக கலோரிகள் உடலில் சேர்ந்து உடல்பருமனுக்கு வழிவகுக்கும். எனவே உடல் எடையைக் கட்டுப்படுத்தி வைக்க எண்ணுபவர்கள் சம்மணமிட்டு உணவருந்தும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.

மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது. எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.