ஆரோக்கியமான முறையில் கூந்தல் வளர வீட்டு வைத்தியம்

5
5

பொதுவாக அந்த காலத்து பெண்கள் தங்களது கூந்தலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் தான் பயன்படுத்தினார்கள் என்று அடிக்கடி நமது வீட்டில் இருக்கும் பெரியவர்கள் நம்மிடம் கூறுவதுண்டு.

அதில் கூந்தலை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்து கொள்ள பயன்படுத்தப்பட்ட ஒரு பொருள் தான் தேங்காய். இதிலிருந்து பெறப்படும் பால் கூந்தலுக்கு பல வகையில் உதவி புரிகின்றது.

ஏனெனில் தேங்காய்ப்பாலில் வைட்டமின்கள் சி, இ, பி1, பி3, பி5,பி6 சத்து, இரும்பு, சோடியம், கால்சியம், மெக்னீசியம், மாக்கனீசு, செலினியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்திருக்கும்.

இது நார்ச்சத்தும், புரோட்டினும் கொண்டதால் கூந்தலுக்கு தேவையான புரதத்தை இவை அளித்துவிடும்.

அந்தவகையில் தேங்காய்ப்பாலை எப்படி கூந்தலுக்கு பயன்படுத்தலாம் என பார்ப்போம்.

தேங்காய்ப்பாலுடன் 2 தே.க எலுமிச்சைச்சாறு கலந்து நன்றாக கூந்தலில் தேய்த்து உச்சந்தலை, தலைமுடியில் பயன்படுத்தலாம். பிறகு 1 மணி நேரம் வரை வைத்திருந்து தலைக்கு ஷாம்பு பயன்படுத்தி அலசலாம். எலுமிச்சையும் தேங்காய்ப்பாலும் சேர்ந்து முடிக்கு பளபளப்பையும் கொடுக்கும்.

தேங்காய்ப்பால் கால் கப், முட்டையின் வெள்ளைக்கரு – 1 இரண்டையும் நன்றாக குழைத்து கூந்தலின் ஸ்கால்ப் பகுதி முதல் தடவி எடுக்கவும். கூந்தலின் நுனி வரை இதை செய்யலாம். பிறகு 30 நிமிடங்கள் வரை கூந்தலில் ஊறவிட்டு பிறகு ஷாம்பு சேர்த்து குளிக்கலாம். எண்ணெய் பசை கொண்ட கூந்தலை கொண்டிருப்பவர்களுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும்.

குறிப்பு
ஒரு பாத்திரத்தில் சூடேற்றி பிழிந்த தேங்காய்ப்பாலை ஊற்றி ஐந்து நிமிடங்கள் வைக்கவும். அடுப்பை அணைத்து விடவேண்டும். அந்த வாணலியில் அந்த சூட்டிலேயே இவை குளிர வேண்டும். இரவு முழுவதும் அதிலேயே வைத்திருந்து பிறகு மறுநாள் எடுத்து முடிக்கு பயன்படுத்த வேண்டும்.

முடி பராமரிப்புக்கு என்று தேங்காய்ப்பாலை எதனோடு கலந்து பயன்படுத்தினாலும் இப்படிதான் பயன்படுத்த வேண்டும்.