ஒரு திருமணம் முடிக்காத ஆணிடம், உனக்கு எப்படிப்பட்ட மனைவி வேண்டும் என கேட்டுப்பாருங்கள், நூற்றுக்கு 99 பேர், எனக்கு வேலைக்குப் போகாத பெண் அல்லது மென்மையான (soft )ஆன வேலை செய்யும் பெண்தான் வேண்டும் என்பார்கள்.
அது என்ன மென்மையான( soft) ஆன வேலை? காலையில் எழும்பி சமைத்து, பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவிட்டு, ஒப்பிஸ் போய், பின்னேரம் கணவனுக்கு முன்பே வீட்டுக்கு வரும்படியான வேலையே, நம் ஆண்களின்.எண்ணப்படி மென்மையான( soft) ஆன வேலை.
நம் ஆண்கள் அப்படியே வளர்க்கப் படுகிறார்கள்.
ஆண் என்றால், நன்றாக படித்து ஒரு நல்ல பதவியைப் பெற வேண்டும், பிறகு நல்ல சீதனத்தோடு ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் முடித்து செட்டில் ஆக வேண்டும்.
இதுதான் நம்மவர்களின் வாழ்க்கைச் சக்கரம்.
பெண்ணின் திறமை, தொழில் என்பவற்றுக்கு நாம் கொடுக்கும் மரியாதை பூச்சியம். ” அதிகமாப் படிக்காத, பிறகு உனக்கு மாப்பிள்ளை எடுக்கிறது கஸ்டம்” என்று இன்றும் சொல்கிற ஒரு சில சமூகத்தில் நாமும் ஒன்று என்பதில் நாம் வெட்கப்பட வேண்டும்.
தன் மனைவி தன்னைவிட திறமையாக இருந்தால் வெட்கம் என நினைத்து, தன்னைவிட உயர் பதவியில் இல்லாத, தன்னைவிட திறமை குறைந்த பெண்தான் மனைவியாக வர வேண்டும் என நினைக்கும் ஆண்கள், அவளிடம் சீதனம் வாங்க வெட்கப் படுவதில்லை என்பதுதான் பெரிய அபத்தம்.
இதனாலேயே நம் இனத்தில் நிறைய ஆண்கள் தாழ்வு மனப்பான்மையோடு
வளர்கிறார்கள். மனைவி தன்னைவிட திறமையானவளாக இருந்தால், அதை அவமானமாக நினைத்து விவாகரத்து வரைக்கும் போன குடும்பங்கள் ஏராளம்.
-சிவச்சந்திரன் சிவஞானம்