பதின்ம வயது காதல் கையாள தவறும் தமிழ் சமூகம்!

3fc9781b825d9222482492da8a6a7e5c 480
3fc9781b825d9222482492da8a6a7e5c 480

“காதலனோடு கைபேசியில் பேசமுடியாத சோகத்தில் 15 வயது மாணவி தற்கொலை” 

இப்படி ஒரு செய்தி.

அந்த மாணவியின் பிணத்தை கல்லால் அடிக்வேண்டும் என போராடும் சமூகக் காவலர்கள் ஒரு பக்கம்.வயதுக்கு வந்து விட்டாள் என ஊருக்கே அறிவித்து, ஹெலிகொப்டரில் பறந்து விழா வைக்கிற இனமே, வயதுக்கு வந்த பெண் காதலித்தால் அவள் பிணத்தையே கல்லால் அடிக்க வேண்டுமென சொல்லுவதுதான் முரண்நகை.


15 வயதில் காதலிப்பது சரியா பிழையா என்பது அவரவர் கருத்தாக இருக்கட்டும். ஆனால் 15 வயதில் காதல் உணர்வு வருவதென்பது சாதாரணமானது.வராவிட்டால்தான் அசாதரணமானது.


இதை எப்படிக் கையாள்வதென அந்தப் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல பெற்றோர்கள், ஆசிரியர்களுக்குக் கூட தெரியாததால்தான், பிள்ளைகள் சிறுவயதிலேயே ஓடிப்போவது, காதல் தோல்வியால் தற்கொலை செய்வது போன்றவை இன்னும் நடக்கிறது.


டீவியில் கவர்ச்சியான பாடல் போனால் பிள்ளை கெட்டுப் போய்விடுவான் என சனலை மாற்றும் பெற்றோர்கள் இருக்கும் சமூகம் நாம்.காதல் உணர்வு, பாலியல் உணர்வு போன்றவை இயற்கையானவை. எதிர் பாலினத்தவர் மீதான ஈர்ப்பு சாதாரணமானதுதான் என்று பிள்ளைகளை உணர வைக்க  வேண்டும்.


அதனால் உந்தப்பட்டு அவசரப்படுவதால் ஏற்படக்கூடிய விளைவுகளை பிள்ளைகளோடு உரையாட வேண்டும்.
பாலியல் சம்பந்தமாக பிள்ளை கெட்டுப்போய்விடுமென நினைத்து கவர்ச்சியான விடயங்கள் டீவியில் போகும்போது துடிச்சுப் பதைத்து சனலை மாத்துறது, பத்திரிகைகளில் கவர்ச்சியான படங்கள் இருக்கும் பக்கத்தை மறைப்பது போன்ற எம்ஜிஆர் கால டெக்னிக்கல் மூலம் பிள்ளைகளை பாலியல் ரீதியான எதிர் மறைரீதியான தேடல்களுக்குத் தூண்டுவதைத் தவிர்க்க வேண்டும்.


அப்படியான காட்சிகளைச் சாதாரணமாக கடந்து செல்லுங்கள்.  இது நிஜமில்லை பணத்திற்காக நடிக்கிற காட்சிகள், என விளங்கப்படுத்துங்கள். 

தமிழ் குடும்பங்களில் இருக்கும் இன்னொரு பிரச்சினை அம்மா அப்பாவிற்கு இடையேயான அன்னியோன்யம் என்பது ஒரு துளிகூட பிள்ளைகளுக்குத் தெரியக்கூடாது என நினைப்பது.

இங்கே அன்னியோன்யம் என்பது உடலுறவு அல்ல. எப்போதும் கணவன் இறுக்கமாகவும், மனைவி கொஞ்சம் மென்மையானவளாகவுமே குழந்தைகள் முன் காட்டிக்கொள்கிறார்கள். அவர்களுக்கிடையேயான காதல் பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை. 


என்னோடு வேலைசெய்யும் ஒரு பிரித்தானியா பெண் இந்த வீக்கென்ட் ஒரு புறநகர் சுற்றுலா விடுதிக்கு போகிறோம் என சந்தோசமாக இருந்தாள். எனது நாயின் முதல் சுற்றுலா என பெருமையாக சொன்னாள். நாயும் நீயும் மட்டுமா என்றேன். அவளது பிள்ளைகளுக்கு 12 , 14 வயதுதான்.


இல்லை வெள்ளி நைட் நான் பிள்ளைகளோடு போகிறேன். சனி பிள்ளைகள் திரும்பி விடுவார்கள் சனி நைட் நானும் கணவனும் நாயும் மட்டும் என்றாள்.


இதிலே அம்மா அப்பா என்பவர்களுக்கிடையேயான அன்னியோன்யம் எவ்வளவு அழகாக குழந்தைகளுக்கு கடத்தப்படுகிறது.


எத்தனை தமிழ் குடும்பங்களுக்கு 40 வயதுக்கு பிறகு குழந்தைகளுக்குத் தெரிந்து விடுமோ என்ற அச்சம் இல்லாமல் நெருக்கமாக இருக்க முடிகிறது?


“தலைக்கு மேல பிள்ள வளர்ந்திட்டான் இப்ப இது தேவையா?” என மனைவி கேட்பது போல படத்தில் சீன் வைக்கிற ஆட்கள்தானே நாம்.


பிள்ளைகளுக்கு முன்  ஜடமாக இருக்காதீர்கள். கணவன் மனைவி தொட்டுப் பேசுவது, பக்கத்திலே இருப்பது , ஐ லவ்யூ சொல்லிக்கொள்வது போன்றவையெல்லாம் பிள்ளைகள் பார்க்கக்கூடாத பாரிய குற்றங்கள் இல்லை.  ஒரு  இல்லறத்தில் பாலியல் வாழ்க்கை ஒரு அங்கம் என்பதை பிள்ளைகளின் ஒவ்வொரு வளர்ச்சிப் படிகளிலும் படிப்படியாக புரிந்துகொள்ள சந்தர்ப்பம் வழங்கவேண்டும்.


அம்மா அப்பாவிற்கிடையேயான வெளிப்படைத் தன்மையும் முக்கியமானது.ஒருவருடைய மொபைலை இன்னொருவர் பார்ப்பது, சமூக வலைத்தளம் போன்றவற்றை சேர்ந்து பார்ப்பது போன்றவை மூலம் குழந்தைகள் வளர்ந்ததும் தங்களும் மொபைலை அம்மா அப்பாவோடு பகிரவேண்டும், சமூகவலைத்தளத்தை சேர்ந்து பார்க்க வேண்டும் என்ற நிலமையை வீட்டில் உருவாக்கி விட்டாலே நிறையப் பிரச்சினை தீர்ந்துவிடும்.

–சிவச்சந்திரன் சிவஞானம்