கிரிக்கெட் பந்தை பளபளப்பாக்க எச்சிலுக்கு பதில் மெழுகு!

9 d
9 d

கிரிக்கெட் பந்தை பளபளப்பாக்க வீரர்கள் எச்சில், வியர்வையை பயன்படுத்துவதற்கு மாற்றாக ஆஸ்திரேலிய நிறுவனம் புதிய மெழுகு ஒன்றை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

கிரிக்கெட்டில் பந்து நன்றாக ஸ்விங்காக வேண்டும் என்பதற்காக எச்சில் அல்லது வியர்வையை கொண்டு பந்தை பளபளப்பாக்குவது வாடிக்கை.

கொரோனா பீதி காரணமாக இது விவாதப் பொருளாகி உள்ளது. இந்த பழக்கத்துக்கு தடை விதித்து மாற்று வழி கண்டுபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இந்நிலையில், கிரிக்கெட் பந்துகளைத் தயாரிக்கும் கூகபுரா நிறுவனம் (ஆஸி.) புதிய மெழுகு ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

எச்சில் அல்லது வியர்வைக்கு பதிலாக அந்த மெழுகைத் தடவி பந்தை பளபளப்பாக்கலாம். இதுகுறித்து கூகபுரா நிறுவன பொது மேலாளர் டேவிட் ஆர்ச்சர் கூறுகையில், ‘ கொரோனா காலத்தில் கிரிக்கெட் விளையாட்டை பாதுகாப்பாக விளையாடுவதற்கான தீர்வுகளை எப்போதும் தேடி வருகிறோம்.

புதிய மெழுகு கண்டுபிடிக்கப்பட்டால் தொற்றுநோயை ஏற்படுத்தும் வியர்வை, எச்சில் ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க முடியும். இந்த மெழுகு ஆரம்ப கட்ட ஆய்வு மற்றும் தயாரிப்பில் உள்ளது’ என்றார். ஐசிசி ஒப்புதல் கிடைத்த பின்னர் இது பயன்பாட்டுக்கு வரலாம்.