அயர்லாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து இலகுவான வெற்றி!

will 720x450 1

அயர்லாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

சவுத்தாம்டன்- ரோஸ் பவுல் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி, 44.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, கர்டிஸ் கேம்பர் 59 ஓட்டங்களையும், என்டி பல்பிரையன் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதன்போது இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், டேவிட் வில்லி 5 விக்கெட்டுகளையும், சகீப் மொஹமட் 2 விக்கெட்டுகளையும், அடில் ராஷித் மற்றும் டொம் கர்ரன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 173 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 27.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, சேம் பிளிங்ஸ் ஆட்டமிழக்காது 67 ஓட்டங்களையும், ஓய்ன் மோர்கன் ஆட்டமிழக்காது 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அயர்லாந்து அணியின் பந்துவீச்சில், கிரைஜ் யங் 2 விக்கெட்டுகளையும், என்டி மெக்பிரையன் மற்றும் கர்டிஸ் கேம்பர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை சாய்த்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லி தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, நாளை (சனிக்கிழமை) சவுத்தாம்டன்- ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.